100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உரிய நேரத்திற்குள் வரவேண்டும்-கலெக்டர் உத்தரவு

புதுக்கோட்டை : 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் உரிய நேரத்திற்குள் அனைவரும் வரவேண்டும் என கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

​புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

​இந்த ஆய்வின் போது, குளத்தூர் வட்டம், குளத்தூர் தொடக்கப்பள்ளியில், பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின்கீழ், வழங்கப்படும் கல்வி முறைகள் குறித்தும், ஒவ்வொரு கல்வி நிலைகளிலும் அரசு தெரிவித்துள்ளப்படி, குழந்தைகள் வாசிப்புத் திறனை பெற்றுள்ளனரா என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

​மேலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான, குடிநீர்வசதி, கழிவறை வசதி, வகுப்பறைகள் மற்றும் மதிய உணவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, கல்வி வளர்ச்சிக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, குளத்தூர் வட்டம், கீரனூரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் மாணவர் விடுதியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு தெரிவித்துள்ள அட்டவணையின்கீழ், உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் மற்றும் உணவின் தரம் குறித்தும், விடுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளான, குடிநீர், கழிப்பறை, உணவு, மின்வசதி உள்ளிட்டவைகள் போதுமான அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள் அனைவரும் தங்களது கல்வியில் முழுகவனம் செலுத்தி எதிர்காலத்தை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கவிதா ராமு அறிவுரை வழங்கினார்.

மேலும் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில், மேலபுதுவயல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், உரிய நேரத்திற்குள் பணியாளர்கள் அனைவரும் வருகை தந்து, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்வது குறித்தும் மற்றும் அவர்களின் வருகை பதிவேட்டினையும் ஆய்வு செய்தார்.

மேலும் குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மேலபுதுவயல் கிராமத்தில், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், பயனாளிகள் வீடு கட்டி வரும் பணிகளை பார்வையிட்டு, வீட்டின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, அதன் முழு பயனை அடைய வேண்டும் என கலெக்டர் பயனாளிகளிடம் தெரிவித்தார்.

​மேலும் கிராமப்புறங்களில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யும் வகையிலும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை உயர்ந்த தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, அறிவுறுத்தினார்.

Related Stories: