மும்பை: ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாத இறுதியில் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பலப்படுத்தவும், அதற்கான ஆடும் லெவனை தேர்வு செய்வதற்காகவும் இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்க முடிவு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இத்தொடரின் மூலம் தினேஷ்கார்த்திக், ரிஷப் பன்ட் பிரச்னை தீர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இருவரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு, தனக்கான இடத்தை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டார். மேலும், பேட்டிங் வரிசையில் எவ்வித பிரச்னைகளும் இல்லை.
பந்துவீச்சில்தான் அக்சர் படேலை தவிர அனைவரும் சொதப்பினார்கள். இந்நிலையில் இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து 2வது ஆட்டம் அக்டோபர் 2ல் கவுகாத்தியிலும், 3வது போட்டி அக்டோபர் 4ல் இந்தூரிலும் நடைபெற உள்ளன. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் உலக கோப்பையில் ஆடவுள்ள காம்பினேஷனுடன் தான் இந்திய அணி ஆடும். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் கண்டிப்பாக இடம்பெற்று விளையாடும் ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் இந்த தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.