6.8 கிலோ கஞ்சா, 2 பைக்குகள் பறிமுதல் தூத்துக்குடியில் கஞ்சா விற்க முயன்ற 7 பேர் கைது-பாளை சிறைக் காவலர் உள்பட 7 பேருக்கு வலை

தூத்துக்குடி :  தூத்துக்குடியில் கஞ்சாவை விற்க முயன்ற செய்த 7 பேரை கைதுசெ ய்த போலீசார், 6.8 கிலோ கஞ்சா, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற சிறைக் காவலர் உள்ளிட்ட 7 பேரை தேடி வருகின்றனர்.தூத்துக்குடியில் கஞ்சா கடத்தப்படுவதாக எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் பிறப்பித்த உத்தரவின் பேரில் தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் ராசி சுஜின்ஜோ, ஐஜி தனிப்பிரிவு எஸ்ஐ ரவிக்குமார், மற்றும் போலீசார் தூத்துக்குடி 1ம் கேட் காந்தி சிலை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் அந்த சிலையின் பின்புறத்தில் இருந்து கஞ்சாவை பரிமாற்றம் செய்தது.

இதையடுத்து அக்கும்பலை போலீசார் சுற்றி வளைத்தபோது உஷாரான 3 பேர் தப்பியோடிவிட்டனர். இருப்பினும் இதில் சிக்கிய 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் சிக்கியவர்கள் தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்த கென்னடியின் மகனும், கடல் தொழில் செய்து வருபவருமான சிம்சன் (26), அதே ஊர் சக்தி நகரை சேர்ந்த தங்கமாரியப்பனின் மகனும் டிரைவருமான பலவேசம் என்ற செல்வம் (27), தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த சண்முகவேலின் மகனும் இறைச்சிக்கடை ஊழியருமான மீரான் என்ற மூர்த்தி (21), தூத்துக்குடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகனும் லோடுமேனுமான தட்சிணாமூர்த்தி (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 3 கிலோ 300 கிராம்  கஞ்சா மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

தப்பியோடிய தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த அண்டோ, கோயில்பிள்ளைவிளையைச் சேர்ந்த மதன், பாளை மத்திய சிறைக்காவலராக பணியாற்றி வரும் பசுவந்தனையைச் சேர்ந்த  அஜித் (26) ஆகிய 3 பேரைத் தேடி வருகின்றனர்.இதேபோல் தூத்துக்குடி அமெரிக்கன் கல்லூரி அருகே கண்காணிப்பு பணி மேற்கொண்ட இதே தனிப்படையினர், அங்கு கஞ்சா பரிமாற்றத்தில் ஈடுபட்ட 7 பேரை சுற்றி வளைத்த போது மூவர் மட்டும் சிக்கினர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்கள் தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்த கென்னடியின் மகன் கடல் தொழில் செய்து வரும் சுதர்சன் (28), மணப்பாட்டைச் சேர்ந்த மீனவர் சந்தோஷ், தூத்துக்குடி, தேவர் காலனியை சேர்ந்த சந்தனபாண்டியின் மகனும் முட்டை வியாபாரியுமான அய்யாக்குட்டி என்ற சுரேஷ் (33) என்பது தெரியவந்தது.  மூவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ஒரு பைக், 3.500 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அத்துடன் தலைமறைவான திரேஸ்புரத்தைச் சேர்ந்த மெல்வர் (30), தூத்துக்குடி அன்னை தெரசா நகரை சேர்ந்த மரியசிங்கம், சங்கரப்பேரியைச் சேர்ந்த உத்தண்டமுருகன், புதுக்கோட்டையைச் சேர்ந்த மூர்த்தி ஆகிய 4 பேரைத் தேடி வருகின்றனர். இரு கும்பலிடமும் இருந்து ரூ.27 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் அடுத்தடுத்து நடந்த இரு சம்பவங்களிலும் 7 பேரை கைதுசெய்துள்ள போலீசார், தலைமறைவான சிறைக்காவலர் அஜீத் உள்ளிட்ட 7 பேரை தீவிரமாகத் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: