சில்லி பாயின்ட்...

* துலீப் கோப்பை பைனலில் தனது கவனத்தை சிதைப்பதற்காக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தரக்குறைவாகப் பேசி ‘ஸ்லெட்ஜிங்’ முறைகேட்டில் ஈடுபட்டதாக தென் மண்டல பேட்ஸ்மேன் ரவி தேஜா நேற்று நடுவரிடம் புகார் செய்தார். இதையடுத்து, யாஷஸ்வியை களத்தில் இருந்து வெளியேறுமாறு மேற்கு மண்டல கேப்டன் ரகானே உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் நடுநிலையோடு நடந்துகொண்ட ரகானேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

* இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் தேர்தலுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அக். 4ம் தேதி மாலை 6.00 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. வாக்குப் பதிவு அக். 18ம் தேதி நடைபெறுவதுடன், அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படும்.

* ஜோர்டானில் நடந்த மகளிர் குதிரையேற்றம் ‘டென்ட் பெக்கிங்’ போட்டியில் பங்கேற்ற இந்திய அணி முதல் முறையாக வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

* பெர்லின் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கென்யா வீரர் எலியுட் கிப்சோகே (37 வயது) 2 மணி, 1 நிமிடம், 9 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றதுடன் தனது முந்தைய உலக சாதனையை முறியடித்தார்.

* இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடந்த 3வது ஒருநாள் போட்டியில், சார்லி டீனை ‘மன்கேடிங்’ முறையில் தீப்தி ஷர்மா ரன் அவுட் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Related Stories: