2வது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது

சென்னை: நியூசிலாந்து ஏ அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் (அதிகாரப்பூர்வமற்றது), 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஏ அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து ஏ அணி 47 ஓவரில் 219 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஜோ கார்ட்டர் 72 ரன் (80 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ரச்சின் ரவிந்திரா 61 ரன் (65 பந்து, 9 பவுண்டரி), ஷான் சோலியா 28 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

இந்தியா ஏ பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 10 ஓவரில் 51 ரன் விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட் வீழ்த்தினார். ராகுல் சஹார், ரிஷி தவான் தலா 2, உம்ரான் மாலிக், ராஜ் பவா தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 50 ஓவரில் 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ களமிறங்கியது. ருதுராஜ் 30, ரஜத் பத்திதர் 20 ரன்னில் வெளியேற, பிரித்வி ஷா அதிரடியாக 77 ரன் (48 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 37 ரன் எடுக்க... ராஜ் பவா, திலக் வர்மா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

இந்தியா ஏ அணி 26 ஓவரில் 180 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து சரிவை சந்தித்த நிலையில், ரிஷி தவான் - ஷர்துல் தாகூர் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டனர். இந்தியா ஏ 34 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்து வென்றது. ரிஷி 22 ரன், ஷர்துல் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. ஏ பந்துவீச்சில் லோகன் வான் பீக் 3, ஜேக்கப் டஃபி 2, ஜோ வாக்கர் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி சென்னையில் நாளை நடக்கிறது.

Related Stories: