மரக்கன்று நடும் விழாவின்போது விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள் மாணவ, மாணவியர் அலறி ஓட்டம்: 22 பேர் காயம்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நான்கு ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தனியார் தொண்டு அமைப்பு சார்பில் இயற்கை திருவிழாவையொட்டி குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தில் பாரம்பரிய மரபு ரீதியிலான ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. முத்தையாப்பிள்ளை மண்டபம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் விழா நிறைவு பெறும் நேரத்தில், அனைவருக்கும் சத்தான இயற்கை உணவுகள், தேங்காய் அவுல் சர்க்கரை, அவுல் பொங்கல், சீரக நீர், பானகம், வெட்டிவேர் நீர் ஆகியவை வழங்கப்பட்டது. அப்போது விழா நடைபெறும் இடத்திற்கு அருகில் இருந்த அரச மரத்தில் 2 இடங்களில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் திடீரென விழாவில் கலந்து கொண்டோரை சூழ்ந்து கொண்டு கொட்ட தொடங்கியது.

இதில் இருந்து தப்பிக்க விழாவில் பங்கேற்ற அனைவரும், அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இருப்பினும் அவர்களை விடாமல் அரை கி.மீ தூரம் வரை துரத்தி வந்து தேனீக்கள் கொட்டின. இதில் பள்ளி குழந்தைகள் 11 பேர், அவர்களுடன் வந்த ஆசிரியைகள் 2 பேர் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேர் ஆகிய 22 பேர் காயமடைந்தனர்.  அனைவரும் கும்பகோணம் அரசு  தலைமை மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றனர்.

Related Stories: