திருமலை: தெலங்கானாவில் மயக்க ஊசி செலுத்தி 2வது மனைவிக்கு கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள ஊரக மண்டலத்தை சேர்ந்தவர் பிட்சம். மயக்க மருத்துவ நிபுணரின் உதவியாளர். பிட்சம் முதலில் தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருக்கு குழந்தை இல்லை. தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக தன்னை விட 20 வயது இளையவரான நவீனா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 3 பேரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். நவீனா கர்ப்பமடைந்ததால், இரு மனைவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நவீனா 2வது முறையாக கர்ப்பமானார். கடந்த ஜூலை 30ம் தேதி தனது 2வது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.