அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு: மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்தார்

சென்னை: ஜூன் 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், எம்பியுமான சி.வி.சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று புதிய மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘‘அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் கட்சி விதிகளை திருத்தியது ஆகியவைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுக்குழு தீர்மனத்தையும், 2.456 உறுப்பினர்களின் ஆதரவு பிரமாண பத்திரத்தையும், கடந்த ஜூலை 13ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றமும் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு நகலையும் வைத்து, தற்போது தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளர் பதவி, உட்கட்சி தேர்தல் உள்ளிட்டவற்றை நடத்தும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து அதனை தேர்தல் ஆணைய இணையத்தில் வெளியிட வேண்டு என கோரிக்கை வைத்து மனுவாக கொடுத்துள்ளோம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் கட்சி பெயரை பயன்படுத்தவோ, முத்திரை, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்துவது தவறானது. முதல்வராக இருந்த அவருக்கு அது தெரிந்திருக்க வேண்டும். ஆனால், குண்டர்களை வைத்து அதிமுக அலுவலகத்தை சூறையாடிய நபர் இவற்றை செய்வதில் ஒன்றும் ஆச்சர்யம் கிடையாது. இதுதொடர்பாக நீதிமன்றம் விசாரணையின்போது தெரிவிப்போம்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தில் நான் தான் அதிமுக என்பதை ஓ.பி.எஸ் ஆவணம் மூலம் வழங்கவில்லை. அதற்கான ஆதாரமும் கொடுக்கவில்லை. அதேபோன்று பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு பிரமாண பத்திரமும் வழங்கவில்லை. அப்படி இருக்கையில் ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர் என கூறுவதை எப்படி ஏற்க முடியும். அது தவறான ஒன்றாகும். ஏனெனில் அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலானது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: