பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை


பழநி: பழநி மலைக்கோயிலில் தடையை மீறி அண்ணாமலை செல்போன் பயன்படுத்திய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பக்தர்கள் ஆர்வமிகுதியில் மூலவரை செல்போனில் படம் பிடித்து வந்தனர். இதனால் உயர்நீதிமன்றம் உத்தரவுபடி அங்கு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பத்திரப்படுத்தி வைக்க செல்போன் பாதுகாப்பு மையம் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பழநி கோயிலுக்கு நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்ய வந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தடையை மீறி செல்போன் கொண்டு வந்தார். மேலும், ரோப்கார் நிலையத்தில் செல்போன் பேசினார். அவர் செல்போன் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கோயில் நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘அண்ணாமலை செல்போன் பயன்படுத்தியது தொடர்பாக ரோப்கார் நிலைய கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது’’ என்றனர்.

The post பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை appeared first on Dinakaran.

Related Stories: