இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கோடியக்கரையில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் அதோடு அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருசில நாட்களுக்கு முன்னர் தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கைது செய்து இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஒன்றிய, மாநில அரசுகள் இவற்றிற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு தொடந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கு மிகவும் கண்டிக்கதக்கது.  மத்திய மாநில அரசுகள்; மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்து, இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் தடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.    

Related Stories: