டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்திருப்பதால் ரூ.200 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிப்பு: பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வேதனை

சிவகாசி: டெல்லியில் பட்டாசு வெடிக்க அம்மாநில அரசு தடை விதித்திருப்பதால் ரூ. 200 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கும் என்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தீபாவளி, தசரா உள்ளிட்ட விழாக்களுக்காக சிவகாசியில் இருந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுற்று  சூழலை காரணம் காட்டி டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்த டெல்லி அரசு 5-வது ஆண்டாக இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியில் இருந்து அனுப்பப்படும் ரூ.200 கோடி மதிப்பிலான பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தீபாவளிக்கு தேவையான பட்டாசுகளை வாங்க டெல்லி வியாபாரிகள் ஏற்கனவே பட்டாசு ஆலைகளில் முன்பணம் செலுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆர்டர்கள் பேரில் டெல்லிக்கு தேவையான பட்டாசுகள் சிவகாசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.

டெல்லி அரசின் நடைமுறையை பின்பற்றி மற்ற மாநில அரசுகளும் உத்தரவிடாமல் இருக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து நாடு முழுவதும் அனைத்து பண்டிகை கொண்டாட்டத்தின் போதும் பொதுமக்கள் பட்டசு வெடித்து கொண்டாட நடவடிக்கை எடுத்து பட்டசு உற்பத்தி தொழிலை பாதுகாக்க வேண்டும் என பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: