அம்பத்தூர்: சென்னை பெருநகர காவல் ஆணையரகம் நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் நலன் கருதியில் 3ஆக பிரிக்கப்பட்டு சென்னை, ஆவடி, தாம்பரம் என 3 ஆணையாளர்கள் கீழ் இயங்கி வருகிறது. இதில், ஆவடி ஆணையரகத்தில், ஆவடி காவல் மாவட்டம் மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டம் என பிரிக்கப்பட்டு 2 துணை ஆணையர்கள் தலைமையில் நிர்வாகம் செய்யபடுகிறது. செங்குன்றம் காவல் மாவட்டத்தின் கீழ் செங்குன்றம், மீஞ்சூர், சோழவரம், காட்டூர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர், மாதவரம் பால் பண்ணை, மணலி, மணலி நியூ டவுன், எண்ணூர் மற்றும் சாத்தங்காடு என 12 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் எண்ணூர் மற்றும் அம்பத்தூரில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. செங்குன்றம், மீஞ்சூர், சோழவரம், காட்டூர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள் நடக்கும் பாலியல் குற்றங்கள், பெண்கள் வன்கொடுமை, போக்சோ போன்ற வழக்குகளை அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல் மாதவரம் பால் பண்ணை, மணலி, மணலி நியூ டவுன், எண்ணூர் மற்றும் சாத்தங்காடு ஆகிய காவல் நிலைய எல்லையில் நடக்கும் பாலியல் குற்றங்கள், பெண்கள் வன்கொடுமை, போக்சோ போன்ற வழக்குகளை எண்ணூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.