சீரமைப்பு பணிகள் நிறைவு; மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவக்கம்.!

ஊட்டி: பாறாங்கற்கள் விழுந்த தண்டவாளம் சீரமைக்கும் பணி நடந்தது. இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் போக்குவரத்து மீண்டும் இன்று தொடங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு -ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாள பாதையில் பெரிய சிறிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மண் சரிந்து ரயில் பாதையை மூடியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 180 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற மலை ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு இயக்கி வரப்பட்டது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவையை கடந்த 5 ஆம் தேதி 6-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது.

இதனையடுத்து மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குன்னூர் மலை ரெயில் இருப்புப் பாதை பொறியாளர் மேற்பார்வையில் ரயில் தண்டவாள பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில் பாதையில் உருண்டு விழுந்து கிடந்த ராட்சத பாறைகள் கம்ப்ரசர் மூலம் துளையிட்டு வெடிவைத்து தகர்க்கப்பட்டன. வெடித்து சிதறிய கற்களை அகற்றிய பின்னர் ரயில் பாதையை மூடி இருந்த மண்ணை ரயில்வே தொழிலாளர்கள் அகற்றினர்.

ரயில் பாதையில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் சுமார் 20 மீட்டர் நீளத்திற்கு ரயில் தண்டவாளம் மற்றும் ராக் பார்கள் உடைந்து வளைந்து சேதமடைந்தன. ரயில்வே தொழிலாளர்கள் சேதமடைந்த தண்டவாளம் மற்றும் ராக்பார்களை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் மற்றும் ராக் பார்களை பொருத்தினார்கள். ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று மாலை 6:30 மணிக்கு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ரெயில் பாதையை சீரமைக்கும்பணி முழுவதும் முடிவடைந்ததால் 2 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் வழக்கம்போல் மேட்டுப்பாளையம் -ஊட்டி, மற்றும் ஊட்டி -மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து சேவை தொடங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: