கஞ்சூர் கிராமத்தில் புதர் மண்டி கிடக்கும் ஆரம்ப சுகாதார மையம்; சீரமைக்க மக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கச்சூரில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிறுவர் பூங்காவை சுற்றியுள்ள புதர்களை அகற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் உள்ள கச்சூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 4 டாக்டர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு அனந்தேரி, போந்தவாக்கம், பெரிஞ்சேரி, கலவை, ஸ்ரீ ராமகுப்பம், சீத்தஞ்சேரி, கூனிப்பாளையம், ராசாபாளையம், பென்னலூர்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.மேலும் இங்கு பெரும்பாலும் பிரசவத்திற்காக அதிக அளவில் பெண்கள் வந்து சேர்கின்றனர்.

அவ்வாறு குழந்தை பெற்ற பெண்களுக்கு என அங்குள்ள புதிய கட்டிடத்தில் தனி இடம் ஒதுக்கி அதில் 3 நாட்கள் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு ஒதுக்கப்படும் தனி கட்டிடத்தின் அருகிலும், பின்புறமும் அதிக அளவில் செடிகொடிகள் படர்ந்து புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் பாம்பு, தேள், விஷப்பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பிரசவ வார்டுக்கு வருகிறது. இதனால் அங்கு வரும் கர்ப்பிணி பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும் கச்சூர் ஆரம்ப சுகாதார மையம் பின்புறம் சிறுவர்கள் விளையாடுவதற்காக கடந்த வருடம் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது போதிய பராமரிப்பில்லாததால் அதுவும் புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது. எனவே ஆரம்ப சுகாதார மையம் மற்றும் சிறுவர் பூங்காவை சுற்றியுள்ள செடிகொடிளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: