ஓசி பிரியாணி தர மறுத்து போலீசில் பிடித்து கொடுத்ததால் ஆத்திரம்; சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்து கடை ஊழியரை சரமாரி வெட்டிய ரவுடிகள் 2 பேர் கைது: ஒருவருக்கு வலை

பெரம்பூர்: சென்னை திரு.வி.க நகர் காமராஜ நகர் 2வது தெருவை சேர்ந்தவர் இக்கிரமுல்லா (35). கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் கடந்த 8 வருடங்களாக வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன், இந்த பிரியாணி கடைக்கு வந்த ஜி.கே.எம். காலனி 37வது தெருவை சேர்ந்த சஞ்சய் (20), கொளத்தூர் 10வது தெருவை சேர்ந்த ஜீவா (19) ஆகியோர் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறு செய்தனர். கடைக்காரர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் கடையில் இருந்தவர்களை தாக்கிவிட்டு சென்றனர். இதுகுறித்து கடைக்காரர் அளித்த புகாரின்பேரில், ராஜமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து சஞ்சய், ஜீவா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேவந்த இருவரும், தங்களது கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் அதே பிரியாணி கடைக்கு சென்றுள்ளனர்.

பின்னர், அங்கிருந்த இக்கிரமுல்லாவை அழைத்து, ‘‘எங்களையே போலீசில் பிடித்து கொடுக்கும் அளவுக்கு நீ பெரிய ஆளா,’’எனக்கேட்டு கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு பிரியாணி கடையில் இருந்த ஊழியர்கள் ஓடிவந்தனர். இதனால் அந்த மூவரும் தப்பிவிட்டனர். இதையடுத்து இக்கிரமுல்லாவை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் 4 தையல்கள், இடது பக்க காதில் ஏழு தையல்களும் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்த புகாரின் பேரில், ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் அருகே கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த சஞ்சய், ஜீவா ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: