பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் 11 குற்றவாளிகளை விடுவித்தது சரியா?...உச்ச நீதிமன்றம் விசாரணை

புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 ஆயுள் தண்டனை கைதிகளை குஜராத் அரசு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்று கொண்டது.

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்த நடந்த வன்முறையில் பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி கூட்டு பலாத்கார செய்யப்பட்டார். அவரது 3 வயது மகள் உட்பட குடும்பத்தினர் 7 பேர் வன்முறை கும்பலால் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி இந்த 11 பேரையும் பொது மன்னிப்பு வழங்கி குஜராத் அரசு விடுதலை செய்தது.  இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இவர்களின் விடுதலையை எதிர்த்து கபில் சிபல் எம்பி, வழக்கறிஞர் அபர்ணா பட் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று பரிசீலனைக்கு வந்தது.

அப்போது, ‘குற்றவாளிகள் எந்த அடிப்படையில் விடுதலை  செய்யப்பட்டார்கள் என்பதை மட்டுமே கேள்வி எழுப்புகிறோம். உச்ச நீதிமன்ற  உத்தரவை அல்ல’ என்று கபில் சிபல் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

Related Stories: