சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாகும். இந்த அணையில் உள்ள ஆற்று பாசனம் மற்றும் முதன்மை கால்வாய் பாசனம் மூலம் சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின்மூலம் சுமார் 78க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கடந்த 10 ஆண்டுகளாக இந்த அணையில் நீர்பிடிப்பு பரப்பில் ஆக்கிரமிப்பு இருப்பதாலும், அணையின் நீர்பிடிப்பு பகுதி மண்ணால் தூர்ந்து போய் உள்ளதாலும் அதிகளவு நீரை மழைகாலத்தில் சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்தபோதிலும் மிக குறைந்த அளவு நீரை மட்டுமே சேமித்து வைக்க முடிகிறது. இதனால் ஒருபோக விளைச்சலுக்கு மட்டுமே பயன்படுகிறது.