காணாமல் போனதாக கூறப்படும் கோயில் சிலைகள், நகைகளை கண்டுபிடிக்க திட்டம் வகுக்க வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துக்கள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு காணாமல் போயுள்ளதாகவும், கோயில் சிலைகள், நகைகள் காணாமல் போயுள்ளதாகவும் கூறி வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வெங்கட்ராமன், சிலைக்கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் சில தீவிரமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். சிலைகள், நகைகள் எங்கிருந்து காணாமல் போயின என்பதை கண்டறிய வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தடுக்கும் வகைவகையில் திட்டம் வகுக்கவும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தோம். வழக்கில் முகாந்திரம் உள்ளதன் தீவிரத்தை கருத்தில்கொண்டு காணாமல் போன கோவில் சிலைகள் மற்றும் நகைகளை கண்டுபிடிக்க உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும்.ஏற்கனவே தாக்கல் செய்த பதில்மனுவில் காணாமல் போன சிலைகள், நகைகளை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே, காணாமல் போன கோவில் சிலைகள், நகைகளை கண்டுபிடிக்க எடுத்துள்ள நிலைபாடு குறித்து புதிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். கோயிலின் மாஸ்டர் பதிவேடு காணாமல் போனதாக மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு கவனிக்க வேண்டும். இந்த விஷயத்தை மிக உன்னிப்பாக கவனிக்குமாறும் அதற்காக இந்த உத்தரவு நகல் அட்வகேட் ஜெனரலுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்….

The post காணாமல் போனதாக கூறப்படும் கோயில் சிலைகள், நகைகளை கண்டுபிடிக்க திட்டம் வகுக்க வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: