பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் பளுதூக்குதல் 73 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட அச்சிந்தா (20 வயது) ஸ்நேட்ச் முறையில் 143 கிலோ மற்றும் கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 170 கிலோ என மொத்தம் 313 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்தார். மலேசியாவின் ஹிதாயத் முகமது 303 கிலோ எடை தூக்கி (138 கி. + 165 கி.) வெள்ளிப் பதக்கமும், கனடா வீரர் ஷாத் டார்சைனி 298 கிலோ எடை தூக்கி (135 கி. + 163 கி.) வெண்கலப் பதக்கமும் வென்றனர். பளுதூக்குதலில் ஏற்கனவே மீராபாய் சானு, ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றிருந்த நிலையில், இந்தியாவுக்கு 3வது தங்கப் பதக்கமும் பளுதூக்குதலிலேயே கிடைத்துள்ளது. நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்தியா வென்ற முதல் 6 பதக்கங்களுமே (3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம்) வெயிட்லிப்டிங்கில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.