படப்பை அருகே விபத்து; பைக் மீது கார் பயங்கர மோதல்: வாலிபர் 2 பேர் பரிதாப சாவு

ஸ்ரீபெரும்புதூர்: சென்னை படப்பை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நண்பர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (18). சிறுமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (17) மற்றும் பனையூரை சேர்ந்தவர் விக்னேஷ் (18). நண்பர்களான இவர்கள் மூவரும் ஒரே பைக்கில் நேற்றிரவு வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் வண்டலூர் நோக்கி சென்றுள்ளனர். அந்த பைக்கை உதயகுமார் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. படப்பை அருகே கீழ்படப்பை பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது படப்பை நோக்கி சென்ற கார், அவர்களது பைக் வேகமாக மோதியது. இதில் பைக்குடன் தூக்கி வீசப்பட்ட உதயகுமார், லோகேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விக்னேஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்  கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணிமங்கலம் போலீசார் வந்து விக்னேஷை மீட்டு உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உதயகுமார், லோகேஷ் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: