44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் வெற்றி பெற 7 மாநில முதல்வர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து!!

சென்னை : மாமல்லபுரத்தில் இன்று தொடங்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர் வெற்றி பெற 7 மாநில முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இன்று  (28.7.2022)  மாலை சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 44-வது சர்வதேச சதுரங்கப்  போட்டியினை  தொடங்கி வைக்க உள்ளார்கள். இத்தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்கள்.

கேரள மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்கள், அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு. பெமா காண்டு அவர்கள்,  சிக்கிம் மாநில முதலமைச்சர் திரு. பிரேம் சிங் தமாங் அவர்கள் ஆகியோர் இச்சர்வதேச சதுரங்க  போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும், கர்நாடக மாநில முதலமைச்சர் திரு. பசவராஜ் பொம்மை அவர்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சர்வதேச சதுரங்க  போட்டி சிறப்பாக நடைபெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

மத்திய பிரதேச முதலமைச்சர் திரு.சிவ்ராஜ் சிங் சவுகான் அவர்கள், தெலுங்கானா மாநில முதலமைச்சர் திரு.சந்திரசேகர் ராவ் அவர்கள், ஹரியானா மாநில முதலமைச்சர் திரு. மனோகர் லால் அவர்கள் ஆகியோர் சமூக வலைத்தளங்கள் மூலம் இச்சர்வதேச சதுரங்க  போட்டி சிறப்பாக நடைபெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: