கொடைக்கானல்: வார விடுமுறை காரணமாக கொடைக்கானல் மற்றும் கும்பக்கரை அருவியில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
நேற்று வார விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நேற்று காலை இதமான சூழல் நிலவி வந்த நிலையில், நண்பகலுக்கு பின்பு சாரல் மழை பெய்தது. சாரல் மழையில் நனைந்தவாறே அனைத்து இடங்களையும் சுற்றுலா பயணிகள் சென்று ரசித்தனர். கடும் பனிமூட்டம், சாரல் மழையுடன் ஏரியில் படகு சவாரி செய்தனர்.
இதேபோல், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து சீராக கொட்டி வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரையில் குவிந்தனர். ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.