திருத்தணி அருகே பொன்பாடியில் தண்டவாளத்தில் ஆண் சடலம்: கொலையா? போலீஸ் விசாரணை

திருத்தணி: திருத்தணி அருகே பொன்பாடி ரயில் தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி, கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி வழியாக திருப்பதி, ரேணிகுண்டா, பொத்தூர், நகரி மற்றும் அரக்கோணம் பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சென்ட்ரல், திருத்தணி வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில், திருத்தணி அருகே பொன்பாடி ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருத்தணி போலீசார் அங்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபருக்கு 45 வயது இருக்கும் என்று தெரிகிறது. அவர் சிவப்பு நிற டீசர்ட், கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார். இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா, யாராவது கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றார்களா என்ற கோணங்களில் திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: