ஸ்டான்லி மாணவர் விடுதியில் முன்னாள் மருத்துவ மாணவர் தற்கொலை

தண்டையார்பேட்டை: கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தை சேர்ந்தவர் குமரவேல். இவர் கடந்த 2013ம் ஆண்டு மருத்துவ படிப்பிற்காக ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார். இதற்கிடையில், இவர் மருத்துவம் படிக்கும்போது இரண்டு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன அழுத்தத்தில் இருந்தார். இதனால் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து தேர்வு எழுதியுள்ளார். அதிலும் தோல்வி அடைந்ததால் மன அழுத்தம் காரணமாக அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், படித்தது போதும் என்று ஸ்டான்லி மருத்துவமனை கல்லூரியில் இருந்து டிசி வாங்கிச் செல்ல தந்தையுடன் நேற்று முன்தினம் வந்துள்ளார். அப்போது நண்பருடைய ரூமில் தங்கி இருந்தபோது பாத்ரூம் போவதாக கூறி சென்றவர் மயக்கத்துடன் திரும்பி வந்துள்ளார். இதை பார்த்து உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டார் என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்து ஏழு கிணறு போலீசார் குமரவேலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டான்லி மாணவர் விடுதியில் முன்னாள் மருத்துவ மாணவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: