முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை- பேட்டை தெரு சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்து கிடக்கும் வடிகால் வாய்க்காலை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேட்டை சாலையில் குட்டியார் பள்ளி வாசல் அருகே கழிவு நீர் வடிகால் ஒன்று செல்கிறது. இந்த கழிவுநீர் வடிகால் ஆவனாநேனா அரசு பள்ளி முதல் துவங்கி பேட்டை செக்போஸ்ட் அருகே செல்லும் கோரையாற்றில் வடிகிறது. இந்த கழிவுநீர் வடிகாலில் முத்துப்பேட்டையில் உள்ள பல்வேறு வார்டுகளில் உள்ள தெருக்களின் கழிவுநீர் இங்குதான் வந்து வடிகிறது. இந்தநிலையில் சில வருடங்களுக்கு முன்பு இந்த பேட்டை சாலை பணிகள் நடந்த போது சாலையோர வடிகால் கட்டுமான பணிகளும் நடந்தது.அப்போது சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றிவிட்டு வடிகால் கட்டுமான பணிகள் நடந்தபோது ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பால் பெயரளவில் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் சாலை நெடுவெங்கும் கழிவுநீர் வடிகால் திறந்த நிலையிலும், சில இடங்களில் பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.