தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக உள்ள நடிகர் கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: துணை நடிகர் மீது போலீசில் பரபரப்பு புகார்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளாக உள்ள நடிகர் கார்த்தி, விஷால் மற்றும் நாசருக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தென்னிந்திய நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் நேற்று முன்தினம் இரவு பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளனர். நடிகர் சங்க வளர்ச்சி பணியில் 3 நிர்வாகிகளும் இரவு பகலுமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக துணை நடிகர் ராஜதுரை உள்ளார்.

அவர் சங்கத்தின் விதிகளுக்கு புறம்பாக வாட்ஸ்அப் குழுவில் சங்கத்தின் நிர்வாகிகளாக உள்ள நடிகர் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த குரல் பதிவு வைரலாகி வருகிறது. எனவே பகிரங்கமாக மிரட்டல் விடுத்த துணை நடிகர் ராஜதுரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வாட்ஸ்அப் குரல் பதிவை நீக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளர். தென்னிந்திய நடிகர் சங்கம் மேலாளர் அளித்த புகாரின்படி தேனாம்பேட்டை போலீசார் அவதூறு வாட்ஸ்அப் குரல் பதிவை வைத்து துணை நடிகர் ராஜதுரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சங்க முக்கிய நிர்வாகிகளுக்கு துணை நடிகர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நடிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: