பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: தீவிர கண்காணிப்பு

பொன்னேரி: பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள், போலீசார் உயிரிழந்தனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பை அதிகரிக்க தமிழகத்தில் ஆண்டுதோறும் கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதில் கடலோர காவல் படையினரே தீவிரவாதிகள்போல் வேடமணிந்தும், டம்மி குண்டுகளை கொண்டு வருவதும், அவர்களை சக கடலோர காவல்படை வீரர்கள் கண்டுபிடிக்கும் வகையிலும் ஒத்திகைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஒத்திகையில் தமிழக காவல்துறை, கடலோர காவல்படை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புதுறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடற்கரை கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதைத்தொடர்ந்து இந்திய கடற்கரை முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோல் நவீன படகுகள் மூலம் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிநவீன நுண்ணோக்கிகள் மூலம் தொலைதூரத்தையும் கண்காணித்து வருகின்றனர். கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் அடையாளம் தெரியாத படகுகள் வந்தால் உடனடியாக தகவல் தரவேண்டும் எனவும் காவல்படையினர் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டும் தளத்துக்குள் ஊடுருவ முயன்ற 4 பேரை கடலோர பாதுகாப்பு படையினர் பிடித்தனர். இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகுதான் ஒத்திகை நிகழ்ச்சி என தெரியவந்தது. இந்த ஒத்திகை நாளை‌ அதிகாலை வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: