பொன்னேரி: பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள், போலீசார் உயிரிழந்தனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பை அதிகரிக்க தமிழகத்தில் ஆண்டுதோறும் கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதில் கடலோர காவல் படையினரே தீவிரவாதிகள்போல் வேடமணிந்தும், டம்மி குண்டுகளை கொண்டு வருவதும், அவர்களை சக கடலோர காவல்படை வீரர்கள் கண்டுபிடிக்கும் வகையிலும் ஒத்திகைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஒத்திகையில் தமிழக காவல்துறை, கடலோர காவல்படை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புதுறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடற்கரை கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.