வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க 40 இடங்களில் தண்ணீர் நிரப்பும் பணி

*வனத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர் : வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க 40 இடங்களில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆற்காடு, ஒடுகத்தூர் ஆகிய வனசரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மான்கள், நரி, காட்டுப்பன்றிகள், பாம்பு, முயல், காட்டெருமை உட்பட பலவகையான விலங்குகள், பறவை வகைகள் உள்ளது. அங்குள்ள உணவுகள் மற்றும் நீரோடைகள், மற்றும் குட்டைகளில் உள்ள நீரை பருகி தாகம் தீர்த்து வருகின்றன.

ஆண்டுதோறும் கோடை காலங்களில் காடுகளில் உள்ள நீரோடைகள், குட்டைகளில் நீர் வற்றினால், தாகம் தீர்க்க வனவிலங்குகள் தண்ணீர் உள்ள இடங்களுக்கு நகர்கின்றது. சில சமயங்களில் மனிதர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் நுழைந்து விடுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் தண்ணீர் இன்றி வறண்ட காணப்படும், குட்டைகளில் லாரி மூலம் நிரம்பி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 105 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இதனால் வனப்பகுதியில் குட்டைகளில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை குட்டைகள் அமைத்து டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க 40 இடங்களில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் வன சரகத்தில் 9 இடங்களிலும், குடியாத்தம் வனசரகத்தில் 3 இடங்களிலும், பேரணாம்பட்டி வனசரகத்தில் 15 இடங்களிலும், ஆற்காடு வனசரகத்தில் ஒரு இடத்திலும், ஒடுகத்தூர் வனசரகத்தில் 12 இடங்கள் என மொத்தம் 40 இடங்களில் 3 நாட்களுக்கு ஒருமுறை டிராக்டர் மூலம் 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இந்த தொட்டிகளில் வனத்துறை சார்பில் நிரப்பப்படுகிறது’ என்றனர்.

The post வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க 40 இடங்களில் தண்ணீர் நிரப்பும் பணி appeared first on Dinakaran.

Related Stories: