மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் மானாம்பதி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை சுற்றிலும் அருங்குன்றம், பெரியவிப்பேடு, திருநிலை, ஒரகடம், காரணை, குண்ணப்பட்டு, ஆமூர், சிறுதாவூர், முள்ளிப்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. பல்வேறு சிறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக மானாம்பதி விளங்குகிறது. மானாம்பதியிலும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது கிராம மக்களின் கோரிக்கை ஏற்று மானாம்பதி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு சிறிய கட்டிடத்தில் செயல்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2014ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டித்தரப்பட்டது. தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ரத்தப்பரிசோதகர், ஒரு உதவியாளர் பணியில் உள்ளனர். காலை 8 மணிக்கு திறக்கப்படும் ஆரம்ப சுகாதார நிலையம் மாலை 4 மணியளவில் மூடப்படுகிறது. இதனால் மாலை, இரவில் பாம்புக்கடி, அவசர சிகிச்சை, மகப்பேறு போன்றவற்றிற்கு சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. குறிப்பாக பிரசவத்திற்கு 25 கிமீ தூரமுள்ள செங்கல்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவலம் ஏற்படுகிறது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள், நாய்க்கடி, பாம்புக்கடி போன்ற விஷ முறிவு மருந்துகள் போதிய அளவில் இல்லை. இதனால் வெளியில் கடைகளில்  மருந்து வாங்கி பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கிராமப்புற மக்களுக்காக தொடங்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. எனவே, மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தி படுக்கைகள், கூடுதல் மருத்துவர்கள், இரவு நேர மருத்துவம், பிரசவம், 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: