கோபி: கோபியில் மாயமான ரூ.1.50 கோடி மதிப்பிலான 5 செல்போன் டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோசலகுமார் (49). இவர், சென்னையில் உள்ள ஜிஐஎல் என்ற தனியார் நிறுவனத்தில் பிராஜக்ட் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை வாங்கி உள்ளது. அதில் கோபி அருகே ஒத்தகுதிரை, தண்ணீர்பந்தல் புதூர், நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி பிரிவு, மற்றும் மொடச்சூர் ராஜன்நகர் ஆகிய 5 இடங்களில் ஏர்செல் நிறுவனம் அமைத்திருந்த செல்போன் டவர் மற்றும் கட்டுப்பாட்டு அறையை சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு நிறுவனம் விலைக்கு வாங்கி உள்ளது.