சங்லி: மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்லி மாவட்டத்தில் உள்ள மகைசல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அருகில் இருந்த வீட்டில் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 9 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. ஒன்பது பேரின் சடலங்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சங்லி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீக்ஷித் கீதம் கூறுகையில், ‘‘வீட்டில் இருந்து 9 சடலங்கள் மீட்கப்பட்டது. 3 சடலங்கள் ஒரே இடத்திலும் 6 சடலங்கள் வீட்டின் மற்றொரு அறையில் இருந்தும் மீட்கப்பட்டன. பிரேத பரிசோதனை முடிவுக்கு பின் தான் அவர்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும்’’ என்றார். சமீபத்தில் டெல்லியில் இதே போல ஒரே வீட்டைச் சேர்நத 9 பேர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.