ஊட்டி: ஊட்டி நகரின் மையப்பகுதியில் நள்ளிரவில் கரடி ஹாயாக உலா வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வழி தவறி நகருக்கு உலா வருவது தொடர்கிறது. இந்நிலையில், ஊட்டி நகரின் மையப்பகுதியாக விளங்கும் கமர்சியல் சாலையில் புது அக்ரஹாரம் பகுதி உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்ளன. நேற்று அதிகாலை 12.30 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று புது அக்ரஹாரம் பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே சாலையில் ஹாயாக உலா வந்தது. கரடியை பார்த்த தெரு நாய்கள் குரைத்த படியே அங்கிருந்து ஓடின. இது அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.