தாஷ்கண்ட்: உஸ்பெஸ்கிஸ்தானில் 5வது ஆசிய கோப்பை யு-23 கால்பந்து போட்டி நடந்து வருகிறது. ஜூன் 1ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஈரான், கத்தார், மலேசியா, வியட்நாம், தஜிகிஸ்தான் என 16 அணிகள் பங்கேற்றன.லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. ஏற்கனவே ஆஸ்திரேலியா, துர்க்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகள் காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. கடைசியாக நடந்த லீக் சுற்றுகள் மூலம் வியட்நாம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வென்று காலிறுதிக்கு தகுதிப் பெற்றது. மேலும் ஜப்பான், சவுதி அரேபியா அணிகள் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் முதல் 2 காலிறுதி ஆட்டங்கள் நாளை நடைபெறும். அதன் முதல் காலிறுதியில் ஆஸ்திரேலியா-துர்க்மெனிஸ்தான், 2வது காலிறுதியில் உஸ்பெஸ்கிஸ்தான்-ஈராக் அணிகள் களம் காண உள்ளன. தொடர்ந்து நாளை மறுநாள் 3வது, 4வது காலிறுதி ஆட்டங்கள் நடைபெறும். அவற்றில் தென் கொரியா, வியட்நாமுடன் விளையாட உள்ள அணிகளின் விவரங்கள் இன்று காலை தெரிய வரும். காலிறுதி சுற்றில் வெற்றிப் பெறும் அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 15ம் தேதியும், இறுதி ஆட்டம் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளன