வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் இருக்கை வசதியில்லாமல் அவதிப்படும் பயணிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரயில் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கருவூலக அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், வங்கிகள், பள்ளிகள் என பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.  இவை மட்டுமின்றி வாலாஜாபாத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வாலாஜாபாத் வந்து தான் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் நிறுவன பணிகளுக்கு சென்று வருகின்றனர்.   

  இதனால் வாலாஜாபாத் பேருந்து நிலையம் எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும். மேலும்  காஞ்சிபுரத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் இங்கு வந்து செல்கின்றன. இதனால் பேருந்திற்காக கிராம மக்கள் நீண்ட நேரம்  நூற்றுக்கணக்கானோர் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.  இதுபோன்ற சூழலில் பேருந்து நிலையத்தில் முறையான இருக்கைகள் இல்லாததால் பேருந்தின் மையப் பகுதியில் கிராம மக்கள் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பேருந்துகள் மக்கள் அமைந்திருக்கும் பகுதியில் திரும்பும்போது அவர்களின் கால்களில் மீது ஏறி விபத்துக்குள்ளாகும் சூழல்  நிலவுகிறது.  இது குறித்து பலமுறை சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் உள்ள பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறை சார்பில் இப் பகுதியில் இருக்கைகள் அமைத்து மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: