அமித்ஷா கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருவதால் அவருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியை கொடுக்கலாம் : சுப்ரமணியன் சாமி ட்வீட்

ஸ்ரீநகர் :ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக அப்பாவி மக்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர், போலீசார் போன்றவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள், பண்டிட் பிரிவை சேர்ந்த ராகுல் பட் என்ற ஊழியரை சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, 2 போலீசாரையும் கொன்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 2 ஆசிரியைகளை சுட்டு கொன்றனர். இதனால், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் இடையே பீதி நிலவுகிறது.

இதனிடையே, குல்காம் மாவட்டத்தில் வங்கி அதிகாரி சுட்டு படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரும் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சாமி வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தாலும் காஷ்மீர் இந்துக்கள் நாள்தோறும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆகையால் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருவதற்கு தேவை இருக்கிறது, என்று தெரிவித்துள்ளார். மேலும் சமீபகாலமாக அமித்ஷா கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருவதால் அவருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியை கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

Related Stories: