சேலம்: அதிகாரிகளை துன்புறுத்தும் வகையில், தேவையில்லாத கேள்விகளை கேட்கும் சமூக ஆர்வலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநில தகவல் உரிமை ஆணையர் பிரதாப்குமார் கூறினார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மாநில தகவல் ஆணையத்தின் 2வது மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. மாநில தகவல் உரிமை ஆணையர் பிரதாப்குமார் கலந்துகொண்டு, விசாரணை நடத்தினார். இதில், உரிய பதில் அளிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் அளித்த பேட்டி: மாநில தகவல் ஆணையத்திற்கு 2வது மேல்முறையீடாக வரும் மனுக்களை, அந்தந்த மாவட்டத்திற்கு சென்று விசாரணை செய்து வருகிறோம். சேலம் மாவட்டத்தில் 60 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை விசாரித்த மனுக்களில் தவறான பதிலை கொடுத்த வருவாய்த்துறையை சேர்ந்த 2 பொது தகவல் அலுவலர்களுக்கு, தலா ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.