பாரிஸ்: முன்னணி வீராங்கனையாக கரோலினா பிளிஸ்கோவா அறிமுக வீராங்கனையான லியோலியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பாரிசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. முன்னணி வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா(30வயது, 8வது ரேங்க்) நேற்று, சிறப்பு அனுமதி மூலம் போட்டியில் பங்கேற்கும் பிரான்ஸ் வீராங்கனை லியோலியா ஜீன்ஜீன்(26வயது, 227வதுரேங்க்) உடன் மோதினார். அனுபவ வீராங்கனையான பிளிஸ்கோவா எளிதில் வெற்றிப் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக விளையாடும் லியோலியா அதிரடியாக விளையாடினார். அதனால் ஒரு மணி 15 நிமிடங்களில் 6-2, 6-2 என நேர் செட்களில் பிளிஸ்கோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். பிளிஸ்கோவா தொடர்ந்து 3வது முறையாக பிரெஞ்ச் ஓபனில் 2வது சுற்றுடன் வெளியேறி உள்ளார்.