ஈடன் கார்டனில் இன்று மோதல்; கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த பஞ்சாப் ஆயத்தம்

கொல்கத்தா: ஐபிஎல் டி20ல் இன்று இரவு 7.30 மணிக்கு ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும் முதல்முறையாக இன்று மோதுகின்றன. கொல்கத்தா அணி இதுவரை ஆடியுள்ள 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. நடப்பு தொடரில் கொல்கத்தா அணி 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், சுனில்நரைன், ராணா, ரஸ்சல், ரகுவன்ஷி, வெங்கேடேஷ் அய்யர், மிட்செல் ஸ்டார்க், வைபவ் என சிறந்த வீரர்களை கொண்ட கொல்கத்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கும். இதுபோல் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில், 2 வெற்றி, 6 தோல்வியடைந்துள்ளது.

இதனால் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்துள்ளது. வாய்ப்பை தக்க வைக்க வேண்டும் என்றால் தொடர் வெற்றிகள் அவசியம். எனவே கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தவேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் களமிறங்குகிறது. காயம் காரணமாக கேப்டன் ஷிகர் தவான் ஆடாதது அணிக்கு பின்னடைவுதான். இருப்பினும் பிரப்சிம்ரன், ஷஷாங் சிங், ஜிதேஷ் சர்மா, ரபாடா, அர்ஷ்தீப், ஹர்ஷல், அஷூதோஷ் சுக்லா ஆகியோர் அதற்காக ஆயத்தமாகி இருக்கிறார்கள். இவர்கள் அதிரடியில் கலக்கினால் கொல்கத்தாவை வீழ்த்தலாம். இந்த இரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் கொல்கத்தா 21 போட்டிகளிலும், பஞ்சாப் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

 

The post ஈடன் கார்டனில் இன்று மோதல்; கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த பஞ்சாப் ஆயத்தம் appeared first on Dinakaran.

Related Stories: