வடகொரியாவில் பிடியை இறுக்கும் கொரோனா கிருமி...மருந்து வினியோகத்தில் ஈடுபட ராணுவத்திற்கு கிம் உத்தரவு

பியாங்யாங்: வடகொரியாவின் கொரோனா தொற்று கிடுகிடுவென பரவி வரும் நிலையில், அத்தியாவசிய மருந்துகளுக்கு அந்நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா பரவிய போதிலும் தங்கள் நாட்டில் நுழையவில்லை என்று வடகொரியா கூறி வந்தது. ஆனால் கடந்த 12ம் தேதி தலைநகர் பியாங்யாங்கில் இருந்து வெடித்து கிளம்பிய கொரோனா கிருமி, சில நாட்களில் வடகொரியா முழுவதும் தீவிரமாக பரவியுள்ளது. கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதுவரை 50த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் விவரங்களையும் சரியான உயிரிழப்பு எண்ணிக்கைகளையும் வடகொரியா முறையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் ஆரம்ப கட்ட சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு வடகொரியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருப்பில் உள்ள மருந்துகளை உடனடியாக மருந்தகங்களுக்கு அனுப்பவும் மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்படவும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.தலைநகர் பியாங்யாங்கில் உள்ள மருத்துவமனை மற்றும் மருந்தகங்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை விநியோகிக்கும் பணியில் ராணுவம் ஈடுபடவும் அதிபர் கிம் ஆணையிட்டுள்ளார். வடகொரியாவுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வழங்க தயார் என்று சீனாவும் தென் கொரியாவும் விருப்பம் தெரிவித்துள்ள போதும் அந்த மனிதாபிமான உதவிகளை வடகொரியா அரசு தற்போது வரை ஏற்றுக் கொள்ளவில்லை.

Related Stories: