மும்பை : முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் அல்ல என்று 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை கூறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஒருவர், கடந்தாண்டு ஏப்ரல் 17ம் தேதி உள்ளூர் போலீசில் அளித்த புகாரில், ‘வீட்டின் அலமாரியில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை. என் மகனிடம் விசாரித்ததில், அவன் ஆன்லைன் கேம் விளையாடியதையும், அந்த ஆப்பை ரீசார்ஜ் செய்வதற்காக அதேபகுதியை சேர்ந்த ஒருவரிடம் பணம் கொடுத்தாக கூறினான்.
மேலும், அந்த நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக எனது மகன் கூறினான். எனவே, பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார். அதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) மற்றும் பிரிவுகள் 8 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 12 (பாலியல் துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குபதியப்பட்டது. தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றம்சாட்டப்பட்ட நபரின் தரப்பில் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.