பந்தலூர் அருகே கல்யாண வீட்டு பந்தலில் வாழை மரங்களை சூறையாடிய யானைகள்

பந்தலூர் : பந்தலூர் அருகே கல்யாண வீட்டில் பந்தலுக்கு கட்டப்படிருந்த வாழை மரங்களை சூறையாடிய காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி டேன்டீ சரகம் 2 காவயல் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி தோமஸ். இவரது வீட்டில் திருமண நிகழ்ச்சிக்காக பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு வாழை மரங்கள் கட்டியிருந்தனர்.

நேற்று முன்தினம் 4 காட்டு யானைகள் அப்பகுதியில் நுழைந்து பந்தலில் இருந்த வாழை மரங்களை தின்று தீர்த்து சூறையாடின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கல்யாண வீட்டில் இருந்தவர்கள் யானைகளை சத்தமிட்டு விரட்டி பார்த்தனர். ஆனால் யானைகள் அங்கிருந்து நகரவில்லை. இதையடுத்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை வனத்துக்குள் விரட்டியுள்ளனர்.

சேரங்கோடு பஜார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மக்னாயானை ஒன்று நடமாடுகிறது. இரவு மற்றும் பகல் நேரங்களில் நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு, தேயிலைத்தோட்டங்களில் அந்த யானை ஆக்ரோஷமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கும்கி யானை வைத்து அந்த யானையை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குட்டியுடன் யானைகள் உலா

alignment=

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி அருகே யானை கூட்டம் குட்டியுடன் சாலையை கடந்து சென்றது. இதனால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. யானைகள் சாலையை கடந்த பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. யானைகள் தொடர்ந்து சாலையோரத்தில் உலா வந்த வண்ணம் உள்ளன. எனவே சுற்றுலா பயணிகள் யானைகளின் அருகே செல்ல வேண்டாம் எனவும், செல்பி எடுக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: