துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த புத்தாநத்தம் இடையப்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி பீட்டர் (55). துவரங்குறிச்சியில் உள்ள ஒரு கடையில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பிலோமின்தாஸ் (18), பன்னங்கொம்பு அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கே.உடையப்பட்டியில் உள்ள கோயில் திருவிழாவில் பங்கேற்க இருவரும் நேற்றிரவு பைக்கில் சென்றனர். திருவிழா முடிந்ததும் இரவு 11.15 மணியளவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். புத்தாநத்தம் அடுத்த சமத்துவபுரம் அருகே வந்தபோது சிவகங்கை மாவட்டம் சிங்கம் நகரில் இருந்து வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் அந்த இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.