கத்தியால் மிரட்டி, வாயில் துணியை திணித்து தரதரவென இழுத்து சென்று பெண் பலாத்காரம்: போதை ஆசாமிக்கு வலை: மாத்தூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: சென்னை மாத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 3வது பிரதான சாலையை சேர்ந்தவர் சுமதி (50, பெயர் மாற்றம்). இவர், மாதவரம் பால் பண்ணையில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக  வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 20ம் தேதி, இரவு நேர வேலைக்கு சென்றார். வேலையை முடித்து விட்டு நேற்று முன்தினம் (21ம் தேதி) அதிகாலையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மாத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் 2வது பிரதான சாலையில் உள்ள விளையாட்டு பூங்கா அருகே சென்றபோது, குடிபோதையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆசாமி,  திடீரென வழிமறித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, ‘நீ யார், எதற்காக என்னை வழி மறிக்கிறாய்’ என்று கேட்டபடி விறுவிறுவென நடந்தார். அதற்குள் அந்த ஆசாமி,  மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி விடுவேன் என சுமதியை மிரட்டியுள்ளார். இதனால் சுமதி, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். சிறிது நேரத்தில், அந்த ஆசாமி, சுமதியின் வாயில் துணியை திணித்து அங்குள்ள விளையாட்டு பூங்காவில் உள்ள மறைவான இடத்திற்கு தரதரவென இழுத்து சென்றார். அங்கு, பலவந்தமாக சுமதியை பாலியல் பலாத்காரம்  செய்து விட்டு தப்பினார். இதனால் பீதியில் உறைந்த சுமதி, வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறி கதறி அழுதார்.

இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். உடனே போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், சுமதியை மர்ம ஆசாமி ஒருவர் பலவந்தமாக இழுத்து சென்றது பதிவாகி இருந்தது. போலீசார் வழக்கு பதிந்து, வீடியோ பதிவை வைத்து அந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: