டெல்லி அபார பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் திணறல்

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர்களாக கேப்டன் மயாங்க் அகர்வால், ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் 9 ரன், அகர்வால் 24 ரன் (15 பந்து, 4 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர்.

லிவிங்ஸ்டன் 2 ரன், பேர்ஸ்டோ 9 ரன்னில் வெளியேற, பஞ்சாப் 54 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. ஓரளவு தாக்குப்பிடித்த ஜிதேஷ் ஷர்மா 32 ரன் (23 பந்து, 5 பவுண்டரி) விளாசி அக்சர் சுழலில் பலியானார். ரபாடா (2), எல்லிஸ் (0) இருவரும் குல்தீப் சுழலில் மூழ்க, ஷாருக் கான் 12 ரன் எடுத்து (20 பந்து) கலீல் வேகத்தில் பன்ட் வசம் பிடிபட்டார். ராகுல் சாஹர் 12 ரன், அர்ஷ்தீப் சிங் 9 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 115 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வைபவ் அரோரா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி பந்துவீச்சில் அக்சர், குல்தீப், லலித், கலீல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முஸ்டாபிசுர் 1 விக்கெட் கைப்பற்றினார். அக்சர் 4 ஓவரில் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 116 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது.

Related Stories: