கிரேன் மூலம் 1 டன் ராட்சத மாலையுடன் ரோஜாவுக்கு வரவேற்பு அளிக்க பட்டாசு வெடித்ததில் திடீர் தீ: அமைச்சராகி சொந்த ஊர் வந்ததும் அப்செட்

திருமலை: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகனின் இரண்டாம்கட்ட அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ஆர்.கே.ரோஜா பதவியேற்றார். பதவி ஏற்ற பின் முதல் முறையாக தனது தொகுதிக்கு நேற்று முன்தினம் வந்தார். இதனையடுத்து ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து நகரி வரை அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள் என நூற்றுக்கணக்கானோர் அவரை வரவேற்று பின்தொடர்ந்தனர்.

முன்னதாக கிரேன் மூலம் 1 டன் எடை கொண்ட ராட்சத மாலை அணிவித்து ரோஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நகரி பகுதியில் ஆர்.கே.ரோஜாவை வரவேற்பதற்காக பட்டாசு வெடித்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடிய நிலையில், பட்டாசு தீப்பொறியால் அம்பேத்கர் சிலை சுற்றி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள், தோரணங்களுக்கு தீப்பிடித்துக் கொண்டது.

உடனடியாக அங்கிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தீயை அணைக்க முயற்சி செய்தும் தீ மளமளவென சுற்றி பரவ தொடங்கியது. ஒருவழியாக கட்சி தொண்டர்கள் தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சராகி சொந்த தொகுதிக்கு வந்ததும் வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீயால் அமைச்சர் ரோஜா அப்செட் ஆகியுள்ளார்.

Related Stories: