ஊ...ஊ... சொல்லவா, ஆலுமா டோலுமா.... போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி தமிழகத்தின் தொன்மையான பண்பாட்டை பேணி காக்க வேண்டும்: பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நகைச்சுவை பேச்சு

சட்டப்பேரவையில் நேற்று தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் (பாஜ) பேசியதாவது: தேனி மாவட்ட எல்லையில் உள்ள கண்ணகி கோயிலுக்கு  செல்வதற்கு கேரள அரசிடம் அனுமதி வாங்கி செல்லவேண்டிய நிலை உள்ளது. இதை  தவிர்க்கும் விதமாக தமிழ்நாட்டு எல்லை வழியாக சாலை அமைக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஓமந்தூரார் ராமசாமிக்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்க வேண்டும். ஐஐடி, ஐஐஎம் படிப்புகளில் சேர அரசு பள்ளி மாணவர்களால் முடியாத சூழல் இருப்பதால், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை  ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களிடம் என்ன திறன் உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் வகையில் அவர்களை வழி நடத்திட வேண்டும். அதனால் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தையல் பயிற்சி உள்ளிட்ட தொழில் பயிற்சிகளை அளிக்கலாம்.

தற்போது பிரபலமாக உள்ள ‘ஊ... ஊ... சொல்லவா’ என்பதெல்லாம் என்ன பாடல் என்று கேள்வி எழுப்பினார். மேலும்,  இதுபோன்ற பாடல் வரிகளால் 50 வருடங்களுக்கு பின்னால் வருவோர், இதுதான் நம் கலாச்சாரம் என்றுஎண்ணிவிட மாட்டார்களா? இப்போது வரும் ‘ஆலுமா டோலுமா ஐசா லக்கடி மாலுமா’ என்ற போன்ற பாடல் வரிகளை புரிந்து கொள்வதற்கு இந்தி படித்தால் அர்த்தம் தேட முடியும். எனவே இது போன்ற சூழலில், நமது தொன்மையான பண்பாட்டை நாம் போற்றி பேணிக்காக்க வேண்டும் என்று பேசினார். நயினார் நாகேந்திரன் நகைச்சுவையான பேச்சை, அனைத்து எம்எல்ஏக்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் ரசித்து கேட்டனர். அப்போது, துணை சபாநாயகர் பிச்சாண்டி, நேரம் அதிகமாகி விட்டது, உட்காரும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், எம்எல்ஏக்கள் அவரை தொடர்ந்து பேச அனுமதிக்கும்படி துணை சபாநாயகரிடம் பரிந்துரை செய்தனர்.

Related Stories: