விடுமுறை தினத்தையொட்டி தேக்கடி மலர் கண்காட்சியை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு

கூடலூர்: விடுமுறை தினத்தையொட்டி, தேக்கடி மலர்க் கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நேற்று அலைமோதியது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். கேரளாவில் உள்ள தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் ஆகியவை சார்பில், தேக்கடி-குமுளி ரோட்டில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில், கடந்த ஏப்.1 முதல் 14 வது மலர்க் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.

இதில், பார்வையாளர்களைக் கவரும் வகையில், 100 தாவரக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்கும் செடி நாற்றுகள், குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம், புகைப்பட கண்காட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. தினசரி கருத்தரங்கம், இன்னிசை கச்சேரி என மே 2ம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை தினமான நேற்று மலர் கண்காட்சிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டுகளித்தனர்.

இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தாமஸ், ஷாஜி ஆகியோர் கூறுகையில், ‘‘உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மலர்ச்செடிகள், மூலிகைச்செடிகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பதை ஊக்குவிக்கும் வகையில், இங்கு வரும் பார்வையாளர்களுக்கு மரம் மற்றும் செடி வளர்ப்பது குறித்து விளக்கி கூறி, மரக்கன்றும் இலவசமாக வழங்குகிறோம். மரங்கள், செடிகள், மலர்கள் குறித்து சிறுவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை’’ என்றனர்.

Related Stories: