பத்திரிகையாளருடன் ஏற்பட்ட காதலால் 56 வயதில் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு திருமணம்: மத்திய பிரதேசத்தில் ருசிகரம்

போபால்: மத்திய பிரதேசத்தில் பத்திரிகையாளருடன் ஏற்பட்ட காதலால் தனது 56வது வயதில் பெண் ஐஏஎஸ் அதிகாரி திருமணம் செய்து கொள்ள உள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா மார்ட்டின் (56), தற்போது மாநில பொது நிர்வாகத் துறை கூடுதல் செயலாளராக பதவியை வகித்து வருகிறார். இவருக்கு மூத்த பத்திரிகையாளர் டாக்டர் ராகேஷ் பதக் என்பவருடன் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு இருந்தது. இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். பத்திரிகையாளர் ராகேஷ் பதக்கிற்கு இது இரண்டாவது திருமணமாகும். ஆனால், ஷைல்பாலா முதல் முறையாக திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இதுதொடர்பாக ராகேஷ் பதக் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘எனது முதல் மனைவி பிரதிமா கடந்த 2015ம் ஆண்டில் காலமானார். ஐந்து ஆண்டுகளாக ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரின் இழப்பு என்னால் மறக்க முடியாது.

இப்போது எனது அடுத்த வாழ்க்கை பயணத்தை ஷைல்பாலா மார்ட்டினுடன் தொடர முடிவு செய்துள்ளேன். உங்களது வாழ்த்துகளை எதிர்பார்க்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். ராகேஷ் பதக் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஷைல்பாலா ஆகியோர் தொலைக்காட்சி விவாதத்தின் போது ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதன் பிறகு இரண்டு வருடங்களாக நண்பர்களாக இருந்த அவர்கள், தற்போது திருமணம் செய்து கொள்வதால் அவர்களை அவர்களது நண்பர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Related Stories: