கோவாக்சின் விநியோகத்துக்கு உலக சுகாதார அமைப்பு தடை

ஜெனிவா: நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. மருத்துவமனைகளில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து  கோவாக்சின் மருந்து கண்டுபிடித்தன. உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் பலவற்றிலும் கோவாக்சின் பயன்படுத்தப்படுகிறது. உலக சுகாதார நிறுவன அமைப்பும் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கி பயன்படுத்தி வந்தன. கடந்த மாதம் 14-ம் தேதி முதல் 22ம் தேதி வரை உலக சுகாதார அமைப்பின் குழுவினர் பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுக்குப்பின் பாரத் பயோடெக் நிறுவனம் 2 நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில், கோவாக்சின் உற்பத்தியை குறைக்க இருப்பதாகத் தெரிவித்து இருந்தது.

இந்த அறிவிப்பை அடுத்து, உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் சப்ளையே ஐநா.வுக்கு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி சக்திவாய்ந்ததுதான், பாதுகாப்பு பிரச்னை ஏதுமில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், கோவாக்சின் மருந்தின் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால், அந்த மருந்தின் சப்ளையில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவாக்சின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் எந்த தாக்கமும் இல்லை. கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட கோடிக்கணக்கானவர்களுக்கு, தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே வழங்கிய தடுப்பூசி சான்றிதழ் இன்னும் செல்லுபடியாகும்,’ என்று  தெரிவித்துள்ளது.

Related Stories: