நடிகை பலாத்கார வழக்கு: நடிகர் திலீப்பின் கார் பறிமுதல்

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டு தற்போது சிறையில் உள்ள சுனில்குமார் என்பவர் பலாத் கார  சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு நடிகர் திலீப்பின் காரை பயன்படுத்தி இருப்பது அம்பலத் திற்கு வந்துள்ளது. நடிகர் திலீப் உள்பட பலர் கைதான மலையாள நடிகை பலாத்கார வழக்கு தற்போது  பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிறையில் உள்ள சுனில்குமார் என்பவர், நடிகை பலாத்கார சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, நடிகர் திலீப்புக்கு சொந்தமான காரில் பயணம் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து திலீப்பிடம் போலீசார் கேட்டபோது, அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் மேலும், அந்தக் கார் பழுதாகி இருப்பதால் மெக்கானிக்கிடம் விட்டிருப்பதாக திலீப் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் திலீப் பயன்படுத்தி வரும் மாருதி ஸ்விப்ட் காரை பறிமுதல் செய்வதற்காக போலீசார் நேற்று மாலை எர்ணாகுளம் ஆலுவாவில் உள்ள திலீப்பின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்தக் கார் அங்கு 4 டயர்களும் பஞ்சரான நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சுனில்குமாருக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திலீப் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இந்நிலையில் சுனில்குமார் சிறையிலிருந்து திலீப்புக்கு எழுதிய கடிதம் போலீசிடம் சிக்கியது. தற்போது சுனில்குமார் பயணம் செய்ததாக கூறப்படும் திலீப்பின் காரையும் போலீசார் கைப்பற்றியுள்ளதால் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் மேலும்  சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: